தூதுப்புறாவின் ஓட்டம் - தூயவரின் நாட்டம்

கோடை வெயிலில், கொளுத்தும் வெப்பத்தில் கடல் காற்று வாங்க விரும்புவோரே, ஊரடங்கில் உள்ளிருக்கும் உங்களுக்கு கடல் சார்ந்த ஒரு கதை. விரும்பி வாசிப்போருக்கு விருட்சம் தரும் விவிலிய விதை. திருமறையிலுள்ள எளிமையான மற்றும் கதை வடிவிலான யோனா எனும் புத்தகத்தை வாசித்து எனக்கு புரிந்தவற்றை மட்டும் இங்கு புது வடிவில் புனைந்திருக்கிறேன்.

படியுங்கள்!  பரமனை போற்றுங்கள்!!


"அழகான நினிவேயின் அக்கிரமம் நிறைஞ்சிருச்சு
அது அழிக்கப்படும் காலம் அருகில் வந்திருச்சு" - என்று  
ஆண்டவர் அழகாய் யோனாவுக்கு சொல்லிட்டு,
"நினிவேக்கு போப்பா, சொன்னத  சொல்லப்பா" என்று சொல்ல. . . 
தப்பிச்சு விலகி யோப்பா வழியா
தர்சீஸ்க்கு ஓடினான் தீர்க்கன் யோனா.

கப்பல் நகர்ந்தது, நம்பிக்கை பிறந்தது,
கடமை மறந்து, உடைமை எறிந்து,
கவலை குறைத்து, தகவலை மறைத்து,
கப்பலில் தாழ்ந்திட்டு, கீழ்த்தட்டை கண்டறிந்து,
களைப்பில் வந்தவன் கடுமையாக உறங்கினான்.

கடல் கொந்தளித்தது,
காற்று  கொக்கரித்தது,
அலைகள் கொப்பளித்தது,
அனைத்தும் தத்தளித்தது.

அரண்ட மக்கள், திரண்ட செல்வத்தை
கண்ணீரோடு கடலில் அள்ளி வீசினாலும்,
விரும்பிய கடவுளிடம் இரைந்து வேண்டினாலும்,
ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும் அடங்கிய பாடில்லை!
ஓடிப்போன யோனா, அந்தோ. .! ஆடிப்போனான்.

கடவுள் சினமும் குறையல, கடல் சீற்றமும் குறையல,
காரணம் வேண்டிக் கூட்டமாக் கூடி, சீட்டெழுதிப் போட்டாங்க.
விழுந்தது சீட்டு, யோனாவுக்குத்தான் வேட்டு,
விக்கித்தான் யோனா; விவரித்தான் தானா.

வழியின்றி யோனாவைக் கடலில் வீச 
விதிக்கப்பட்ட மீனோ விழுங்கிக்கொண்டது.
விழுங்கிருச்சா? அய்யய்யோ . . . . . 
முள்ளு குத்திருக்கலாம், மூச்சு முட்டிருக்கலாம்
இல்ல, இல்ல, உண்மையிலே இல்ல!
யோனா கெஞ்சினான், கதறினான், கடவுளைக் கூப்பிட்டான். . .
மீனுக்குள்ள போன யோனா, 
மூணு நாழி கழிச்சுப் போன வண்ணமாகவே மீண்டான்.
“மீனுக்கு தொண்டயில ஏதோ சிக்கிருச்சு - யோனாவை
கவ்வுன மீனு கரையிலக் கக்கிருச்சு. .”

வழி தவறிய யோனா விழிபிதுங்கி நின்றான்,
மீண்டும் ஒரு குரல், மீட்பரின் திருக்குரல்,
படைத்தவருக்குப் பணிந்திட்டான் 
பாதத்தில் விழுந்திட்டான் - நினிவேயின்
பாதையில் விரைந்திட்டான்.
பயந்து சென்றவன் - துணிந்து சொன்னான்,
“அக்கிரமம் பெருகிருச்சு - அழிவு நெருங்கிருச்சு,
நாற்பது நாள் உங்களுக்கு கெடு,
நாளைக்கு காத்திருக்குது கொடும் கேடு.”
சொன்னதை மீண்டும் சொன்னான்,
சொன்னவர் மீட்பர் என்றான்.

அலறிய மக்கள் ஆண்டவரை அண்டினர்,
அழித்துவிடுவார் என்று அஞ்சினர்.
அரசனும் சாக்கு உடுத்தி சாம்பலில் அமர்ந்து 
அருந்தவம் புரிந்தான் - அதையே ஆணையாக்கினான். 
அரசன் முதல் ஆடு-மாடு வரை 
அன்னம் தண்ணி விடுத்து
பச்சத்தண்ணி பல்லுல படாம
பாவ வழியை விட்டுப் பரமனிடம் திரும்பினர்.
படைத்தவர் அவர்களை பார்த்தார்,
பாவப்பட்டு அவர்களுக்காக பரிதவித்தார்.
அழிப்பேன் என்றவர் அடம்பிடிக்கவில்லை
அம்மக்களை கண்டு மனம் மாறினார்.

"அய்யோ, அப்போவே சொன்னேனே . . . 
இரங்குவீர், உருகுவீர், மனம் மாறுவீர்னு தெரியுமே.
இதுக்கு எதுக்கு  இத்தனை பாடு . . . "
இகத்தில் அவன் நொந்திட்டான்,
இறுக்கத்தில் அவன் வெந்திட்டான்.

மவுனமாயிருந்த ஆண்டவர் ஆமணக்கை வளரச்செய்தார்,
மனமடிந்திருந்த யோனா மகிழ்வோடு தூங்க சென்றான்,
மறுநாளிலே, மலர்ந்த ஆமணக்கு பூச்சியால் பட்டுப்போக
மத்தாப்பாய் வெடித்திட்டான் - மனம் நோக எரிந்திட்டான்.

"ஏப்பா, விதைச்சியா, தண்ணி ஊத்தினியா, வளத்தியா . . .
அதுவா வளந்துச்சு, ஒரே நாளில பட்டு போச்சு,
அது ஆலமரமா என்ன? வெறும் ஆமணக்குச் செடிதானே!
அதப்பாத்து இவ்வளவு பரிதாபப்படுறியே. . . . . 
இவங்களுக்கு சொந்த கையில சோத்துக்கை எதுன்னு தெரியாது,
ஒருத்தன், ரெண்டு பேரு இல்ல, இலட்சத்து இருபதாயிரம் பேர்,
இவங்கள படைச்ச நான் 
இவங்கள பார்த்து பரிதாபப்படமாட்டேனா ?"
ஆண்டவர் கேட்க அமித்தாயின் மகனோ அமைதியானான்.

நிதானிக்காமல் ஓடிப்போன யோனா போலவோ - அல்லது
நினிவேயின் நிலையிலோ,  நாம் இருக்கலாம்!
நம்மை படைத்த அன்பான இறைவன்
நமக்காக பரிதவிக்கிறார் - அதை ஒருநாளும்
நாம் மறக்க வேண்டாம்.

எந்த நிலையில் நாம் இருந்தாலும்
வந்த வண்ணமாய் நம்மை ஏற்பவர் அவர்!
நம்மை நாம் பரிசோதனை செய்வோம்
நன்மைக் கிட்டா இப்பாழுலகில்,
வாழும் காலம் முழுதும் பரமன் பாதம் பற்றிக்கொள்வோம்,
வாழ்வின் நித்தியத்திற்கு, வழியினை நிச்சயம் பெறுவோம்.


யோனா புத்தகத்தை படியுங்கள்;
கோணலானவைகளை செம்மையாக்குங்கள் !
கீழானவைகளை விட்டுவிடுங்கள் ;
மேலானவைகளை தேடுங்கள்,
பேரானந்தம் கொள்ளுங்கள்!!
இறையாசீர் என்றும் உங்களோடு இருப்பதாக!!!


(நான் சிறுவனாய் இருந்தப்பொழுது எனக்குச் சொல்லப்பட்ட திருமறை கதைகளுள், என்னை வெகுவாய் கவர்ந்த கதை என்றால் அது "யோனாவும் பெரிய மீனும்" என்ற கதை தான். வளர்ந்த பின்பு, நான் அதை வாசிக்க எண்ணம்கொண்டு திருமறையில் உள்ள தீர்க்க தரிசன புத்தகங்களுள், எளிமையான மற்றும் கதை வடிவிலான அப்புத்தகத்தை வாசித்தேன். கூடுதலாக கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் வாசித்தபடி, யோனா என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் יוֹנָה‎ (Yona, Yônā) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்திலும் இலத்தீனிலும் இந்நூல் LONAS என்று உள்ளது. இப்பெயரின் பொருள்  "புறா" என்பதாகும். சுமார் கி.மு. 8ஆம் நூற்றாண்டில், வடக்கு நாடாகிய இஸ்ரயேலில் வாழ்ந்த இறைவாக்கினராக யோனா கருதப்படுகிறார்.
இந்த ஒரு புதிய பயணத்திற்கு பாதை அமைத்துக்கொடுத்த அண்ணன் SF, நெடுகவே மெருகேற்றிய அண்ணன் SANJEEVI, அக்கா PHILO, ஊக்கப்படுத்திய அண்ணன் SAKKARA ஆகியோருக்கு எனது நன்றிகளை நவிலுகிறேன். வாசிக்கும் உங்களையும் இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். இறையாசீர் உங்களுடன் எப்பொழுதும் இருந்தாகுக.)


Comments

  1. அருமை மாப்பிள்ளை

    ReplyDelete
  2. கதை வடிவில்அ மிக அருமை தம்பி

    ReplyDelete
  3. Awesome Flow. MGBU

    ReplyDelete
  4. Title super
    Good Nalla irukku kachi

    ReplyDelete
  5. நினிவே கவலை ஒருபுறமிருக்க, யோனா யாரும் இல்லையென்கிற கவலைதான் இப்போது அதிமிகு கவலையாக இறைமகனுக்கு.. யோனாக்களே செவிகொடுப்போமா..

    ReplyDelete
  6. Simple and Super

    ReplyDelete
  7. Thoothupura kathai vadivil Neengal Thoothu solli vitteergal. Vaazhthukkal.

    ReplyDelete
  8. Dai very nice poem machi. We expect a Good Book from You. God Bless You

    ReplyDelete
  9. Sir Romba Super aana Kavithai Sir. . .Nice Bible Story Sir

    ReplyDelete
  10. Wowww. A complete story in a simple way. God bless you

    ReplyDelete
  11. Super. Poetic form of book of Jonah. Well formulated.

    ReplyDelete
    Replies
    1. Thank you for your kind words & your support. .

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED