யோசேப்பு எனும் ரோசாப்பூ

"ஒரு அழகிய ஆண்ட்டியின் ஆபாசமான
உல்லாச அழைப்புக்கு அலறி ஓடி
இறைவனைத் தேடிய இளைஞன்"
இப்படி ஒருவன் இருக்கிறானா என்ன?
தெரிந்தவுடன் திடுக்கிட்டேன்.

மறைந்து மறைந்து தவறிழைப்போருமுண்டு
மானமிழந்து தவறிழைப்போருமுண்டு
ஆனால், அலறியோடினானா?

ஆம், அவனோ அடிமை,
அவளோ அரண்மனைக்கிளி (அழகி) - அப்படியானால்
"அலறி ஓடினான்" என்பதற்குப் பதிலாக
'அத்து மீறினான், அட்ஜஸ்ட் செய்தான்'
அப்படித்தானே இருந்திருக்கும்? - ஆனால்
உண்மையோ விசித்திரமானது.

சாதகமான சூழலில் சாதித்திருந்தால் சரி
பாதகமான சூழலில் அல்லவோ அவன்
சரித்திரம் படைத்திருக்கிறானாம்!!

அறைக்கதவுகள் எல்லாம் சிறைக்கதவுகளான
இந்தச் சூழலில் என் சிந்தனையைச் சிறைபிடித்த
அந்த ஒரு வாலிபன் தான் யோசேப்பு.

அவனைப் பற்றி தேடி ஈட்டியதை
உங்களை நாடி நீட்டுகிறேன்.

நீண்ட நெடுங்கதைத் தான் எனினும் - ஆழ் கடலில்
நீந்தி முத்தெடுங்கள் என உங்களை
வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
(ஆபிரகாம் (ABRAHAM), நம்பிக்கைக் கொள்வோர் அனைவரின் தகப்பன். 
அவர்தம் அன்பு மகன், இறைவனின் அருட்கொடை, 
ஈசாக்கின் (ISAAC) அன்பு புதல்வர் இருவரில், இளையவனான யாக்கோபின் (JACOB) 
அன்பு மனைவியும், முதலாமவளின் தங்கையுமான, ராகேலுக்கு (RACHEL) 
அழகும் அறிவும் தன்னகத்தே கொண்டு பிறந்தயோசேப்பின் (JOSEPH) 
ஆச்சரியமான மற்றும்  அறிவுப் புகட்டுகின்ற வரலாறே இது!)

[பத்து பிள்ளைகள் மற்ற மனைவியர்களால் தனக்கு பிறந்திருந்தாலும் பிரியமானவளாம் ராகேலுக்கு ஒரு பிள்ளையும் இல்லையென பதறித் திரிந்த யாக்கோபின் வாழ்வில் ஓர் கனிதரும் செடிப் பிறந்தது.]

நீண்ட காலம் பிள்ளையற்றிருந்த ராகேலை
நினைத்தருளினார் சருவவல்ல கடவுள்
ஏற்றகாலத்தில் யோசேப்பு மகனாகப் பிறக்க
எழுச்சிக் கொண்ட யாக்கோபு எனும் இஸ்ரவேல் (ISRAEL)
மகிழ்ச்சிக் கடலில் முங்கி முத்தெடுத்தார்.

இரவாகப் பகலாக இறைவனிடம் கையேந்தி
உறவாட ஒரு குழந்தை வேண்டிப் பெற்றதால்
அகமும் புறமும் முழுக்க ஆனந்தமயமாகி
யுகத்தை விட்டு நீங்காத நிலவாக - யாக்கோபின்
நெஞ்சமெல்லாம் நீங்காமல் நிறைந்திருந்தான் அவன்.

வான் நிலா போல உலா வந்த யோசேப்பு
முன் பிறந்த சகோதரர் பத்துப் பேரை விட
தாமதமாய் வந்து பிறந்ததினாலோ என்னவோ
தகப்பனால் பாசமாக வளர்க்கப்பட்டான்.
பட்டத்துக்கு வரும் ராசகுமாரன் உடுத்தும்
பலவர்ண அங்கியை உடுத்தித் திரிந்தான்
'பாசமாம் பாசம் பாசாங்கில்லாத பாசம்!'
ஒத்தப் பிள்ளையின் மேல் மொத்தப் பாசம்
பத்துப் பேரும் வெறுப்பதற் கொத்தப் பாசம்.
பால் போல தூய்மையும், பண்புமுள்ள யோசேப்பு
பதினேழு வயதினுள் பக்குவமாய் நுழைகிறான்.

செல்ல மகன் யோசேப்பு இரண்டு சொப்பனம் கண்டான்.
தானே உயர்ந்து நிற்கக் கண்டான்’ தன் முதற் கனவிலே,
தன்னை அனைவரும் வணங்கி நிற்கக் கண்டான்’ இரண்டாமதிலே!

தமையர் பத்துப் பேரிடமும் தான் கண்டதை
 யதார்த்தமாய் சொன்னான்,
தீயிடாமல் அவர்களைப் பற்றியெரியும்
நெருப்பாக்கினான் அச்செய்தியால்,
எரிமலைக்குச் சரிமலையாக
 வெறுப்பாகிப் பதறினர் பத்துப் பேரும்,
அள்ளிக் கொஞ்சும் அப்பனைக் கூட
சற்றே அச்செய்தி ஆத்திரப்படுத்தினது.

அடுத்தடுத்து நாட்களும் அகவெறுப்பில் நகர
ஆடு மேய்க்க அண்ணன்களும் அடுத்தவூர்ப் போக
அளவளாவி அவர்களை நலம் விசாரித்துத் திரும்ப
அன்பு மகன் யோசேப்பை அவர்களிடமே அனுப்பினான்
அந்தி வயது சென்ற அன்புத் தகப்பன் யாக்கோபு.

சொப்பனக்காரனைப் பார்த்ததும்,
சொரிந்தது கோபம் அவர்களுக்கு.
தன்னவர்களைப் பார்த்த யோசேப்போ
தண்ணீரைப் பார்த்த மான் போல
துள்ளியோடி அவர்களிடம் வர - அவர்களோ
தூரத்தில் ஓடி வரும் அவனைக் கொன்றிட
தண்ணீரற்ற மீனாய் துடித்துடித்தனர்.

குழுவில் மூத்தவன் ரூபன் பரிதாபப்பட்டு
"கொலைப் பழி நமக்கெதுக்கு?
ஆழமான குழிக்குள்ள தள்ளிருவோம்,
ஆளையேக் காணோம்னு சொல்லிருவோம்" என்றான்.

பலவர்ண அங்கியைப் படக்கெனக் கழற்றி
சிலபல நாளாய்த் தண்ணீரற்றிருந்த
ஆழமான குழியொன்றினுள் அவனை
அவசரமாய்த் தள்ளி ஆனந்தம் கண்டனர்
ஆத்திரம்தீர ஆர்ப்பரித்து நின்றனர்.

அலறி அங்கலாய்த்து ஆர்ப்பாட்டம் செய்திருப்பான்,
கதறி கண்ணீர் தடாகத்தில் அமிழ்ந்திருப்பான், 
சீமானாய் வளர்ந்த செல்லத் தம்பியை
ஏமாற்றியதாய் எண்ணி எள்ளி நகைத்தனர்
கண்டிடா, கதறலைக் கேட்டிடா வண்ணம்
செவியை அடைத்துச் சாப்பாட்டுக்கு நகர்ந்தனர்.

மீதியானியரெனும் வியாபாரக் கூட்டம் தூரமாய்
வருகிறதைக் கண்டு உதித்ததவர்களுக்குத் திட்டமாய்
யோசனையொன்று இறுகிய மனதிலே மட்டமாய்
யோக்கியமாய், கொலைப் பழிக்குத்தப்பிடும் விதமாய்
யூதா என்பவன் இருபது காசுக்கு விற்றிட்டான் அவனை.
யூதாதான் அவன், இயேசுவை விற்ற யூதாஸ் அல்ல!
மூன்றெழுத்து யூதாஸ் 30 வெள்ளிக் காசுக்காக!
இரண்டெழுத்து யூதா 20 வெள்ளிக் காசுக்காக!

கழற்றிய அவனது பலவர்ண அங்கியை எடுத்து
கிடா ஒன்றை அடித்து அதன் குருதியில் தோய்த்து
காத்திருந்த தகப்பனுக்கு கொடுத்தனுப்பினர்.
காட்டு மிருகமொன்று பீறிட்டிருக்குமோவென்று
கண்டுச் சொல்லுங்கள் பாசமகனின் அங்கிதானேஇதுவென்று - ஓர் கள்ளச் செய்தியைக் கனக்கச்சிதமாய் சேர்த்தனுப்பினர்.

பார்த்த தகப்பன் பேச்சற்றுப் போனான்
பறிகொடுத்து விட்டேனே எனப் பரிதவித்தான்.
சூரியன் இல்லாத வானம் போல - அந்த
ஞானச் சூரியனை இழந்த வெறும் வானமாய்
துயரத்தை உழுது கண்ணீரையே அறுவடைச் செய்தான்.

காசுக்கு விற்கப்பட்ட யோசேப்பு
காரியசித்தி உள்ளவனாக இருந்தான்.
காலமெல்லாம் கர்த்தரையே நினைத்தான்,
கர்த்தரோ யோசேப்போடு இருந்தார்.

அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பு
அமர்ந்தான் பணிவிடைக்காரனாய் - எகிப்து
அரசனின் மந்திரியாம் போத்திபாரின் வீட்டினிலே;
அருமையாய் பணிசெய்தான் 
அனைவரையும் ஆச்சரியப்படுத்தினான்
அவன் பணிக்கண்டு அவனிடமாய் 
அனைத்தையும் ஒப்படைத்தான் எஜமான்
அச்சமயம் தான் அது நடந்தது
அதிசயமாய் பழம் நழுவி பாலில் விழுவது பொய்த்தது.
அருமையான தோற்றமும் அம்சமானக் குணமும் கொண்ட
அழகு வாலிபனுக்கு ஓர் அழைப்பு - தன் எஜமாட்டியிடமிருந்து;
ஆசைக்கு இணங்க அழைப்புக் கொடுத்தாள்.
ஆவலாய் மஞ்சத்திற்கு வர அறைகூவல் விடுத்தாள் - தான்
பார்க்கும் பொழுதெல்லாம் பதறிய அவனை
பதமாய்ப் பேசி பணித்திட முனைந்தாள்.
பார்வையால் பாயை விரித்தாள்
பாவம் செய்யத் தீவிரித்தாள்.

நித்தம் நித்தம் அவள் அவனை நச்சரிக்க - இறை
சித்தம் செய்வதே நலமென அவன் எச்சரிக்க – ஓர் நாள்
பாவ வெறி அவள் தலைக்கேற –
காமம் அவள் கண்ணை மறைக்க
பாய்ந்துப் பிடித்தாள் அவனது ஆடையை
பகலில்,வீட்டில் யாருமிலா வேளையிலே

பதறிய யோசேப்போ தன் மேலாடையை அங்கேதானே விட்டுவிட்டு
பயங்கரத் தீப்பற்றியதை போலப் பறந்தான் அங்கிருந்து.
உயர் அழுத்த மின்சாரம் உடம்பில் பாய்ந்ததைப் போல
உயிரைக் கொல்லும் அழைப்பை விட்டு உதறி ஓடினான்.
பேச்சுக்கே இடம் கொடாமல் மூச்சிரைக்க ஓடினான்.

விளக்கம் கொடுக்க நினைத்திருந்தால்
விழுந்திருப்பான் அவள் வலையில்,
"பசியோடு இருந்தான்,
பருவத்தால் இடறினான்" என்று
பத்தோடு பதினொன்றாகவே இருந்திருப்பான்
அடிச்சுவடின்றி அழிந்துப் போயிருப்பான்!

பலவர்ண ஆடை அன்றுக் கிழிந்தது
பகைத்து நின்ற தன் உடன் பிறப்புக்களாலே!
பழைய பஞ்சு ஆடை இன்றுக் கிழிந்தது
பாவ வெறி கொண்ட பைங்கிளியாலே!!

பரமன் பார்க்கிறாரே எனப் பண்புடனிருந்தவனை
பதம் பார்க்கிறதோ இவ்வுலகம்? ‘பலமுறை - பலமுனை’
சலிக்காமல் சங்கடங்களைச் சகித்ததினாலே தானே - இப்போ
'புலி பசித்தாலும் புல்லைத்திங்காது' என்பதின் அர்த்தம் புரிகிறது.

ஊளையிட்டு ஊரைக் கூட்டி
கூச்சலிட்டு குற்றஞ் சாட்டினாள்
ஆத்திரத்தில் அனைவரிடமும்
ஆடைக்காட்டி ஆளைக் காட்டினாள்.

பாவத்திற்கு விலகியோடிவன் மீதே
பாலியல் குற்றச்சாட்டு விழுந்தது.
புகாரைக் கேட்டதும் புருஷன் பொங்கியெழுந்தான்
பிடித்து அவனை அரண்மனைச் சிறையில் அடைத்தான்.

பாடாய்ப்படுகிறானே - என்ன
பாவம் தான் செய்தானிவன்?
மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழ
மனுப்போட்டா பிறந்திருப்பான்?

கர்த்தர் யோசேப்போடே சிறைச்சாலையிலும் இருந்தார்!
அர்த்தமற்றிருந்த அவன் வாழ்வை அர்த்தமுள்ளதாய் மாற்ற!!

காலமே எழுந்தான், கனிவோடு நடந்தான்
கவலையற்றுக் கடமையில் கருத்தாய் இருந்தான்.
காவலில் இருந்த அரண்மனை அலுவலர் இருவருக்குக் கனவு வர
கவலையும் கண்ணீரும் இலவச இணைப்பாகிட – அவர்தம்
கனவுகளுக்கு, கடவுளின் துணைக் கொண்டு
கர்த்தரை மகிமைப்படுத்தி அர்த்தம் சொன்னான்.

கவலையற்றிருங்கள், சொன்ன அர்த்தம் சத்தியம்;
கனவு விரைவில் மெய்ப்பெறுவது நிச்சயம்!
அரண்மனையில் அரசனருகில் நின்றிடும் பொழுது
அன்பாய் எனக்காய்ப் பரிந்து பேசிடும் அப்பொழுது
சிறை வாழ்விலிருந்து நிறை வாழ்விற்கு
கறை இல்லாமல் விரைவில் வருவேனே என்றான்.

அர்த்தம் அப்படியே நிறைவேறியது.
அவனிடம் யோசேப்பு முன் சொன்னது
"களவாய் இங்கு விற்கப்பட்டேன்
காமுகன் எனப் பெயர் பெற்றேன்;
காவலில் அடைக்கப்பட்டேன்.
பாவம் ஏதுமறியேன்.
நீ வெளியே சென்றதும்
மறந்து விடாதே என்னை" - என்பது
முற்றிலும் அவனுக்கு மறந்தே போனது.
‘மனிதன் மனம்’ அல்லவா, ஒருவன் மறந்தே விட்டான்
மற்றொருவன் கனவு மெய்ப்படும்படி இறந்தே விட்டான்!

ஆண்டுகள் இரண்டுக் கழிந்தது
அரசனுக்கு இரண்டுக் கனவு பிறந்தது.
அரண்டு போனான், மிரண்டு போனான்
அர்த்தம் சொல்ல ஆள் தேடினான்
தூக்கம் இழந்தான் துக்கம் அடைந்தான்
ஆச்சரியம் தான் என்னே! - அன்று
மறந்தவனே இன்று அரசனுக்குத் தோள் கொடுத்தான்
யோசேப்பைக் கூப்பிடலாம் என யோசனை கொடுத்தான்.

அழைத்து வரப்பட்டான் யோசேப்பு
‘அர்த்தம் சொல்லுதல் கடவுளுக்குரியதே’ என
ஆண்டவரை மகிமைப்படுத்தி
‘அடுத்தடுத்த ஏழு ஆண்டுகளுக்கு
அதிகதிகமான விளைச்சலும் செழிப்பும்,
அதன் பின் கடும் கொடும் பஞ்சமும் வரும்' என
அர்த்தத்தை அற்புதமாகக் கூறினான்,
அடுத்த அடியும், படியும் என்னவென்று
அழைத்தவனுக்கு படித்துக் கொடுத்தான்.
அரசனோ அவனைக் கண்டு அதிசயித்தான்
அறிவாளியான அவனை அதிகாரியாக்கினான்,
அத்தேசம் முழுக்க அவனைப் பிரதமர் ஆக்கினான்,
அவன் விரலில் முத்திரை மோதிரம் அணிவித்து அழகுப் பார்த்தான்,
அரசனுக்கு அடுத்து அவனே எல்லாம் என அதிகாரம் கொடுத்தான்.

அழகான மனையாளைக் கைபிடித்துக் கொடுத்து, - சிறு
அரண்மனை ஒன்றினையும் அவர்கள் வாழப் பரிசளித்தான்.
அவசரமாய் அவன் தன் பணித்துவங்க ஆர்பரிப்புடன் அனுப்புவித்தான்.

முழு நாடும் குனிந்து அவனை வணங்கி
முத்தமிடும் அளவுக்கு உயர்த்தப்பட்டான்,
திட்டங்கள் தீட்டித் தீவிரமாய்ச் செயல்பட்டான்,
சட்டங்கள் இயற்றி தானியச் சால்களை நிறைத்திட்டான்,
கொஞ்சக் காலம் கண்ணயராது உழைத்திட்டான்
பஞ்சக் காலத்தைப் பக்குவமாகக் கையாண்டான்.
கர்த்தர் யோசேப்போடு இருந்தார் - அவன்
காரிய சித்தி உள்ளவனாக இருந்தான்.

பக்கத்து நாடுகள் பஞ்சத்தால் பரிதவிக்க
எகிப்து தேசத்தை பிரதமர் யோசேப்போ
பிரமாதமாகப் பஞ்சத்திலும் பசி தீர்த்தான்.
பக்கத்து நாடுகளும் படையெடுத்தது
போருக்கல்ல சோறுக்கு!

பெத்த மகனையிழந்து கவலையுற்றிருந்த நிலையிலே
பென்யமீனை அடுத்த மகனாய் ராகேல் பெற்றெடுத்த வகையிலே
பெருங் கவலை சிறிது சிறிதாய் மறைந்திருந்த வேளையிலே
பெரும் பஞ்சம் பெருந்துயராய் வாட்டி வதைத்தப் பொழுதிலே
யாக்கோபு தன் பிள்ளைகளைப் பார்த்து
‘பஞ்சம் தலை விரித்தாடுகிறது
பார்த்துக் கொண்டே இருந்தால்
பசிதீர்ந்துவிடுமா?’

"அண்டை நாடாம் எகிப்திற்குச் சென்றால்
ஆகாரத்திற்கு ஏதாவது வாங்கி வரலாம்" - என்றார்.
பக்கத்திலே தன் மகனாம் பென்யமீனை பாதுகாப்பாய் வைத்ததாலே மீதம்
பத்துப் பேரும் பையைத் தூக்கி பரிதாபமாக
பக்கத்துக்கு நாடாம் எகிப்திற்கு வந்தனர்
பணிவாய்ப் பிரதமர் சாப்நாத் பனேயாவின் முன் நின்றனர்
படுகுழிக்குள் தள்ளிய யோசேப்பு தான்
பிரதமர் என அறியாது அவனை வணங்கினர்.

அடிமையாக விற்றவர்கள் அவனை அறியாவிடினும்,
அவர்களை அறிந்து கொண்ட அவனோ,
அறிந்தும் அறியாதவனாய்
அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறான்.
விற்றுப் போட்ட தம்பியின் காலில்
விழுந்து வணங்கி – தானியம் கேட்டார்கள்.
‘கொட்டிக் கொடும் கோமானே!’ எனக்
கையேந்தி அவன் முன் நின்றார்கள்!
அன்று கண்ட கனவுப் பலித்ததே!
அவனை மெய் சிலிர்க்க வைத்ததே!!

'எட்டிப் பார்க்க வந்தீர்களா? - எமைத்
தொட்டுப் பார்க்க வந்தீர்களா?
வேள்வி வேண்டி வந்தீர்களா? - இல்லை
வேவுப் பார்க்க வந்தீர்களா?' எனச்
சலங்கையை நாவில் கட்டி
சரமாரிக் கேள்விக் கேட்டு
சந்தேகத்தின் பேரில் அவர்களை
சிறையில் சில நாள் அடைத்தான்
சிம்மக் குரலோன்!

மூன்று நாள் கழித்து அனைவரையும் விடுவித்தான்,
மூதாதையர் முதல், வீட்டு விலாசம் வரை விவரம் வினவினான்
மொத்தம் நீங்கள் எத்தனைப் பேர் என்றான் - பதில்
முன்னுக்குப் பின் முரணாகச் சொன்னதாலும்
முதிர் வயது தந்தையுடன் எல்லோருக்கும் இளையவன் ஒருவன்
முத்தாய்ச் சொத்தாய் வீட்டிலிருக்கிறான் என்றதாலும்
முன்னதாய்ச் சொல்லியதனைத்தும் உண்மையென நிரூபிக்க - அந்த
மற்றுமொருவன் வரும் வரை விடுவதில்லையென்று
அவர்களில் ஒருவனாம் சிமியோனைக் கட்டிக் காவலிட்டான்.

அவ்வளவு கொடுமையானவனா என்ன இந்த யோசேப்பு?
இல்லை இல்லை பனித் துளியை விட பரிசுத்தமானவன்.
தன் சின்னத் தம்பியைக் காண விரும்பியதாலே
சிமியோனைச் சிறையிலிட்டான்.

அர்த்தமின்றி அலைக் கழிக்கப்பட்டதால்
'அவன் அழு குரல் கூட கேட்காமல்
அவனை அள்ளிக் கொடுத்துட்டோமே
அன்பான யோசேப்புக்குச் செய்த துரோகம்
ஆண்டுகளாகியும் நம்மைத் தொடருகிறது.' - எனத்
அவர் தம் மொழியிலே தங்களுக்குள்
அழுத வண்ணம் பேசிக் கொண்டதை
அரியணையில் வீற்றிருந்த யோசேப்பு
அப்பட்டமாய்க் கேட்ட பொழுது உள்ளத்திலிருந்து
அடக்கமாட்டா ஊற்றாக அன்பு பெருக்கெடுத்தது,
அழுக இடம் தேடி அழுது முடித்தான். - அதன்பின்
அவர்கள் சாக்குகளில் தானியங்களை நிரப்பி
அதற்குள் பணத்தையும் போட்டுக் கட்டி அனுப்பச் சொன்னான்.

முதுமைத் தொட்டிலில் இளைப்பாறிக் கொண்டிருந்த
யாக்கோபிடம் நடந்ததைச் சொல்கிறார்கள்.
திறக்கிறார்கள் சாக்கை தானியத்தைக் காட்ட
திகைக்கிறார்கள் அவர்கள் சாக்கில் பணத்தினையும் பார்க்க
அப்படியே அனைவரும் வாயடைத்து நிற்க - தந்தை
அடித்துக் கொண்டு அழுகிறார்.
'இரைத் தேட அனுப்பினால் - ஒரு மகனை
சிறையிலா விடுவீர்கள்?" என வினவுகிறார்!
பணத்தைச் சாக்கில் கண்ட அவருமே
பதறியடித்துக் கதறுகிறார்.
நரை கண்ட கிழவன் என்மீது, இன்னும் எத்தனை
முறை தான் இடி வந்து விழுமோ என அழுகிறார்.

பெரும் பஞ்சம் தொடரவே
பெற்று வந்த தானியமும் தீரவே - இளையவன்
'பென்யமீனை உடன் அனுப்புங்கள்
நாங்கள் சிமியோனை மீட்டு
பதினோரு பேரும் சேர்ந்து வருகிறோம்' எனக்கூற
தன்னிலை மறந்த யாக்கோபோ பதறுகிறார்.
'தொல்லைக் கொடுக்கும் பிள்ளைகளே!
என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்களே.
முதலில் யோசேப்பு, அடுத்து சிமியோன்,
இப்போது பென்யமீனா?' என அறவே மறுத்து
கடைசிப் பிள்ளை பென்யமீன் தன்னுடன்
கடைசி வரை இருக்க வேண்டுமெனக்
கல்லும் நீராகும் வண்ணம் கதறுகிறார்.

கற்கண்டைச் சாறாக்கி,
வெண்ணிறப் பாலோடு ஒன்றாக்கி,
சந்தனக் காற்றில் விழுந்த
சாரல் மலை போல
சம்பூரணமாக வளர்த்திருப்பார்.
அதனாலே தான் கூட அனுப்ப மறுக்கிறார்.

ரூபன் இதமாய்ப் பதமாய் வாதிட்டும்
பிடிவாதமாக மறுத்தார்.
பஞ்சம் மீண்டும் படியேற, பட்டினிப் பற்றிப்பிடிக்க
அற்பப்பணத்துக்கு யோசேப்பை விற்றுப் போட்ட
யூதாவே நிபந்தனை ஜாமீன் போட முனைந்தான்!
வஸ்துகளும் வாசனைப் பொருட்களும் கொடுத்து
‘வழியின்றி வழியனுப்பினார்’ யாக்கோபு!

அவர்களனைவரும் மீண்டும் எகிப்து வந்து சேர்ந்தனர்
அவையில் யோசேப்பின் முன் பணிவாய் நின்றனர்.
அய்யா பணமும் சாக்கில் வந்தது
அங்கு சென்ற பின் தான் தெரிந்தது
அத்தனையும் கொண்டு வந்துள்ளோம்
அன்பு தம்பியையும் அழைத்து வந்துள்ளோம் - தந்தை
ஆசீருடன் பரிசுப் பொருளும் வைத்துள்ளோம்
அன்பாய் அனைத்தையும் ஏற்பீரே - எங்களுக்கு
தானியமும் தந்து சிறையிலுள்ள சகோதரனையும் தந்து
தயவாய் அனுப்பி வைப்பீரே என கைகூப்பி நின்றனர்.

அன்புத் தம்பியை பார்த்ததும் அகமகிழ்ந்து - ஆடு
அடித்து விருந்தொன்றை ஆயத்தம் பண்ணச் சொன்னான்.
அண்ணன் சிமியோனை அவிழ்த்து விட்டான்,
அன்பாய் பேசினாலும் தனியே அமர்ந்திட்டான்
அகவை வாரியாய் அவர்களை அமர்த்திட்டான்
அறுசுவை உணவை அவர்கட்கு விருந்திட்டான்.
அன்புத் தம்பி பென்யமீனுக்கு அனைத்திலும்
அதிகமாக ஐந்து மடங்கு பாசமாய்ப் பங்கிட்டான்.
அங்கே நிகழ்ந்ததனைத்தும் ஆச்சரியமாய் இருந்திடவே
அமைதியாய் அனைவரும் வாயடைத்து விருந்துண்டனர்.
அவ்வளவு நடந்தும் அவன் தான் யோசேப்பு என அறியாதிருந்தனர்.

விருந்து முடிந்த பின்னர் தானே
விரைவாய் அவர்களை அனுப்பிடவே
தானியமும் சாக்குகளில் நிரப்பி
பணத்தையும் சேர்த்துக் கட்டி
அன்புத் தம்பியின் பைக்குள் ஒரு
அரிய பானபாத்திரம் போட்டுக்
அதனைக் கட்டச் சொன்னான் யோசேப்பு.
அனைத்தும் விசித்திரமாயிருந்தும் - காவலர்
அனைவரும் அவன் சொன்னதைச் செய்தனர்.

சிறிது தூரம் போனதும்
சிறிய பாத்திரத்தைக் காரணம் காட்டி
சிறைப் பிடித்துவரச் சொன்னான் - வந்தவர்களிடம்
சிறந்த செயலோ இது? எனச் சீறிப் பாய்ந்தான் - பின்
சின்னவனை சிறையிலடைக்க உத்தரவிட்டான்.
மற்றவரனைவரும் வீடுச் செல்ல வாய்ப்பளித்தான்.

சகோக்கள் கதறினர் – ஜாமீன் போட்ட
யூதாவோ ஓலமிட்டான்,
அதிபதி முன் அபயமிட்டான்
தம்பிக்குப் பதில் தன்னுயிர் தர துணிந்திட்டான்.

அனைத்தும் கண்ட அந்நேரம் தானே
அடக்க முடியவில்லை அதிபதி யோசேப்புக்கு
அண்ணண்களைப் பார்த்து அதிகாரம் துறந்து
அனைவரின் முன்னிலையில் அலறி விட்டான்.
"அன்புறவுகளே நான் தான் யோசேப்பு
அன்று தொலைந்த அதே யோசேப்பு." - என்று
அவர்கள் மொழியிலே பேசினான்.
அழுதான் அவர்களின் கழுத்தைக் கட்டி
உழுதான் அவர் தம் இதயத்தில் ஏர்ப்பூட்டி.
அடிக்கப்பட்ட ஆடு உறைந்து தொங்குவதைப் போல
ஆடிப் போனார்கள்; அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

அதிர்ந்த அவர்களை அமைதிப்படுத்தினான்
அனைவரையும் மன்னிக்கிறேன் அச்சமின்றி இருங்கள்’ என்றான்.
அன்று நான் எகிப்து வந்தது இறைவனின் அருட்செயலே;
இன்று நம்மனைவருக்கும் உணவு கிடைக்கச் செய்த திருச்செயலே.
உங்களையும் காப்பேன் உங்கள் பிள்ளைகளையும் காப்பேன் எனக் கூறி
அன்புக் கடவுளை அங்கும் மகிமைப்படுத்தினான்.

அரசனுக்கு அனைத்தும் தெரியவர - குடும்பத்தினர்
அனைவரையும் அவருக்கு அறிவித்திட்டான் - மேலும்
அப்பாவை அழைத்து வர ஆசைப்பட்டான் - அரசனின்
ஆணைப் பெற்று ஆட்களை அனுப்பினான்.

மனம் மடிந்திருந்த யாக்கோபு
மகிழ்ச்சியில் திளைத்தான் - தம்
மக்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு
மகனைப் பார்க்க மறுநொடியே கிளம்பினான்.
மகனைப் பார்த்து மட்டற்று மகிழ்ந்தான், - இனி
மரணித்தாலும் கவலையில்லை என்றான்.
பகைத்து விற்கப்பட்டவனே - இன்று
அனைவரையும் பாசமாகப் பராமரித்தான்,
பஞ்சக்காலத்தில் பசியும் தீர்த்தான்,
பிழைப்புக்கு வழியும் வகுத்தான்.

தனித்திருந்த எகிப்திலே
தனக்குப் பிறந்த தன்னிரு மகவையும்
தன் தகப்பன் யாக்கோபிடம் அழைத்துவந்தான் - அவரும்
தன்னிறைவுடன் அவ்விருவரையும் ஆசீர்வதித்தார்.

ஆண்டியானாலும் அடிமையானாலும்
ஆண்டவர் ஒருவனை அரசனாக்க முடியுமென்பதை
ஆண்மகன் யோசேப்பின் அர்த்தமுள்ள வாழ்வு
ஆணித்தரமாய் உரைக்கவில்லையோ!

பதின் பருவ வயதில் கண்ட கனவினை
பக்குவப்பட்ட வயதில் மெய்ப்படச் செய்தாரே
பரமாளும் இறைவன்; பார் போற்றும் பரமன்!
பரந்து விரிந்த உலகில் அவர் திருவிளையாடல் தான் என்னே!
பரிசுத்தமாய் வாழப் பயபக்தியுடன் தீர்மானித்தால்
பரமாளும் பொறுப்பைப் பாசமாய்த் தந்திடமாட்டாரோ?

காசுக்காக விற்கப்பட்டாலும்
காவலிலே அடிமைப்பட்டிருந்தாலும்
காயங்கள் பல ஆனாலும்
காலங்கள் உருண்டோடினாலும்
காலமெல்லாம் கர்த்தரையே நினைத்தான்.
கர்த்தர் யோசேப்போடு இருந்தார்
காரியச் சித்தி அளித்தார்.

இல்லத்தவரும் இனத்தவரும் நம்மைப் பார்ப்பதிலல்ல
இருக்கின்றவராகவேஇருக்கிறவர் பார்ப்பதில் தானுள்ளது
இனிய பார்வை ஒன்றினை அவர் பார்த்தாலே போதுமே
இல்லறம் சிறக்குமே; அகவாழ்வில் இன்பம் பிறக்குமே.

இப்படிப்பட்ட இறைவனை நான்
இவ்வுலக மக்கள் அனைவருக்கும்
இனிமையாய் அறிமுகம் செய்வதையே
இவ்வாழ்வின் பயனென நினைக்கிறன்.

அதிபதியின் மனைவி அக்கம் பக்கம் பார்த்தாள்
ஆனால் யோசேப்போ ஆண்டவரை பார்த்தான்
ஆண்டவருக்குரிய அச்சம் அர்ப்பணிப்பை கொடுத்தது
ஆவியானவர் அதிசயிக்கும் வகையிலே அரியனையில் அமர்தினார்
அக்காலக் கதையைக் கண்டு ஆண்டவர்க்கு நம்மை அர்பணிப்போமா!
இக்கால யோசேப்பாய் இயேசுவின் கரத்தில் என்றும் பயன்படுவோமா!!

யோக்கியன் யோசேப்பின் வாழ்க்கையே,
யோசிக்க வைக்கட்டும் நம்மையே!!
சிந்திப்பீர் சான்றோரே,
சந்திப்பீர் இறைவனையே!!

இன்பம் மிகப் பெருகட்டும்
இறையாசீர் கிட்டட்டும்!!

(இந்தக் கதையை நெடுகவே மெருகேற்ற, தங்களது பொன்னான நேரத்தைச் செலவழித்து,  மிகவும் மெனக்கெட்ட அன்புநிறை உள்ளங்களான அண்ணன் SANJEEVI, அண்ணன் SF, அக்கா PHILO ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை நவிலுகிறேன். வாசிக்கும் உங்களையும் இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். இறையாசீர் உங்களுடன் எப்பொழுதும் இருந்தாகுக.)

Comments

  1. Really Superb. . . Amazing Lines. Awesome. Super Super Super. A complete History in a Simple Way. God Bless You

    ReplyDelete
  2. இன்றைய நடைமுறை தமிழில் யோசேப்பு என்னும் காவியத் தலைவனின் வாழ்வியல் படித்ததில் மிக்க மகிழ்ச்சி சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Amazing Lines. Meaningful Writing. Use your talent for the glory of the Lord. May God Bless You. Congratulations

    ReplyDelete
  4. Wonderful ! Really it is amazing ! I don't have proper words to express my gratitude ! Hearty congratulations ! May the Almighty be glorified !

    ReplyDelete
    Replies
    1. Teacher it is a great pleasure for me to get such a positive words from you. Thank you for your kind words and your support.

      Delete
  5. It's really amazing jesman
    Good meditation in our poetic language.
    May God be Glorified through your language proficiency.
    God bless you my dear


    ReplyDelete
  6. மனதில் யோசேப்பின் சிறு குறும்படம் ஓடியது.......
    நகைச்சுவை நயம், கவிதை நயம்பொநயம் வழிந்தது.....
    என்னை அறியாமல் என் முகத்தில் புன்னகை மலர்ந்தது.....
    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை......
    மிக மிக சிறப்பு

    ReplyDelete
    Replies
    1. சிறப்பு வினோத். நன்றி

      Delete
  7. மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழ மனுப்போட்டா பிறந்திருப்பான்😜👌

    ReplyDelete
  8. Really Super. Sirappaana pathivu. God Bless You. Kanmunnae oru kaaviyam.

    ReplyDelete
  9. Simple and meaningful poem. Spritual message in a poetic language. Kindly use this talent for the Glory of God. Let His name to be magnified. There is a great vaccum for the spritual writing for youths. We need more writers for His kingdom expansion. Work hard for that. Blessings Upon U

    ReplyDelete
  10. அருமயான வரிகள்.
    நீரூற்று எழுதுகோலில்
    நீல நிற உதிரம்
    நதி போல பாய்ந்தோட
    நிகரற்ற
    நற்காவியத்தை
    நயமுடன்
    நல்கியுள்ளீர்... வாழ்த்துக்கள் மாப்பிள்ளை

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி மாப்ள. . . லண்டன்ல இருந்து தமிழ் . . . ஆஹா. . .

      Delete
  11. Jesman very beautiful and meaningful lines.... May God bless you abundantly

    ReplyDelete
  12. Whenever I am reading this story of Joseph; My Heart automaticaly Fly Up. Well articulated sir. God Bless You Sir.

    ReplyDelete
  13. Unable to control my tears. Definetly it will be Useful to all youngsters those who read it. Amazingly articulated. God bless you. Let His name to be Glorified.

    ReplyDelete
  14. ஒரு செய்தியை எடுத்துரைப்பதில் கண்ணீர் வர வைப்பது சற்று எளிது. ஆனால் உங்கள் எழுத்துரைப்பில் கண்ணீர்..

    வீன் காரியங்களுக்கு விலகியோடி. தீர்மானத்தில் நிலைத்திருப்பதில் தான் எத்தனை ஆசி..

    தாய்த்தமிழில் இனி வரிகள். படைத்து பதித்ததால் மகிழ்ச்சி.. கதை நயத்தில் நெகிழ்ச்சி..

    பிரார்த்தனைகள் அன்பரே..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு வணங்குகிறேன் ; பிராத்தனைகளுக்கு நன்றி நவிலுகிறேன் அன்பரே

      Delete
  15. Simple and neat anna💜Ur genuinely proposed each and every line😊its So meaningful and its reached our Heart🧡Somewhere a Poet is inside u🥰Keep rocking 👏ALL THE BEST ANNA💜

    ReplyDelete
  16. Awesome Lines. This kind of writings may be trigger youngsters to know the Bible Stories & Life Morals. God bless You Jesman Sir

    ReplyDelete
  17. கண்கள் குளமாகும் வண்ணம் கதை வரிகள். ஆண்டி என்றதும் ஆவலாய் வந்தால், ஆண்மீக சொற்பொழிவு கேட்டதை போன்ற உணர்வு.

    ReplyDelete
    Replies
    1. முழுமையாக வாசித்தது மகிழ்ச்சி. இறையாசீர் உங்களை நடத்தட்டும்.

      Delete
  18. யோசேப்பு என்பவன் ஒரு நல்ல மனிதனாக வாழ்ந்திருக்கிறான். கதை அருமை. புதிது என்றாலும், புரிகிறது !

    ReplyDelete
    Replies
    1. கதை புரிந்தது மனநிறைவை தருகிறது. யோசேப்பை பற்றி அறிந்தது மனமகிழ்வை தருகிறது.

      Delete
  19. Very very nice .👌👌👌👏👏👏

    ReplyDelete
  20. Super thambi🙏 padika padika nanum apdiye antha pathuperoda pathinonna egipthuku ponamathiri irunthathu ungloda varigal innum neriya nalvali pothanaiyinai engaluku kudukanum athuku thevan ungalodu irunthu valinadathanumnu vendi virumbi ketukiren thambi🤝 amen🙏

    ReplyDelete
    Replies
    1. ஊக்கப்படுத்தும் உங்கள் உள்ளத்திற்கு உளமார்ந்த நன்றி அண்ணன்!
      உற்சாகப்படுத்தும் வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி அண்ணன்!!
      ஆண்டவரது அருள் நம் அனைவரையும் தொடர்ந்து நடத்துவதாக!!!

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED